அம்மா!
நீ,
ஆதிசக்தியின்
திருவுருவே - அண்டங்கள்
அடிபணியும் தேவியே!
என்
ஆறடி உடலை
அலங்கரித்த மதியே!
தேவரும் மூவரும்,
நின்று தொழுகின்ற
தெய்வமே,
பக்குவமாய் என்னைப் பெற்றெடுக்க
பத்தியம் இருந்தவளே,
எதிர்பார்ப்பு இல்லாமல்
என்னை ஈன்றெடுத்தவளே.
ஒச்சமாய்ப் பிறந்தாலும்
எச்சமென்று எண்ணாதவளே..
ஊரே ஏசி வந்து நின்னாலும்,
"எம் புள்ள உத்தமன்னு" உரக்கச்
சொன்னவளே..
பத்து மாதம் கடந்து,
இன்னும் என்னை
நெஞ்சில் சுமப்பவளே.
மரண வலி பொறுத்து
என்னை மனிதனாக்கியவளே,
ஒசோன் படலமாய் இருந்து
நித்தமும் என்னை காப்பவளே,
சிப்பியைப் பெற்றெடுத்த
நன்முத்தே,
நான்
தேடாமல் கிடைத்திட்ட
திரவியமே..
என்
ஆத்ம ஜோதியின்
ஒளி விளக்கே.
உந்தன் வாய்மொழி கேட்காமல்
சலிக்கிறது வாழ்க்கை,
வலிக்கிறது நெஞ்சம்,
ஆதவனைக் காணாத - இந்த
அகிலத்தைப் போல.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக